கனடாவில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலைக்குள் நேற்று பகல் வேளையில் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், சம்பவ இடத்திலேயே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பாடசாலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றுமொரு சம்பவம் அருகில் உள்ள வீடொன்றிலும் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தாக்குதலின் பின்னணியில் உள்ள திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவம் நடந்த உடனே அப்பகுதியில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர்கள் மற்றும் அம்யூலன்ஸ் மூலம் அவசரமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி, தாக்குதல்தாரி பழுப்பு நிற முடி மற்றும் அதே நிறத்திலான ஆடையை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. கனடா வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Similar Posts