
மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு வரும் 26ஆம் திகதி நடத்தப்படும் என்றும், இன்று (23) முதல் பொதுமக்கள் பாப்பரசரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்றும் கர்தினால்கள் அறிவித்துள்ளனர்.
88 வயது நிரம்பிய புனித பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் சுவாசத் தொகுதி தொற்று தொடர்பான நோய்க்கு உள்ளாகி ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று சில வாரங்களுக்கு முன்னர் வீடு திரும்பினார். கடந்த ஞாயிறன்று உயிர்த்த ஞாயிறு திருப்பலி மற்றும் விஷேட வழிபாடுகளிலும் அவர் பங்கேற்றார்.
இவ்வாறான நிலையில் புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் (21) இறைபதமெய்தியது கத்தோலிக்க மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு உலக நாடுகளின் தலைவர்களும், சமயத் தலைவர்களும் அவருக்காக அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
பாப்பரசரின் இறுதிசடங்கு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கர்தினால்களின் முதல் கூட்டம் வத்திக்கான் சினோட் மண்டலத்தில் நேற்று(22) காலை நடந்தது.
இதில், பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கை வரும் 26ஆம் திகதி நடத்துவது என்றும், இன்று (23) முதல் பாப்பரசரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
பாப்பரசரின் மறைவுக்குப் பிறகு கர்தினால்கள் கூடி எடுக்கும் முதல் முக்கிய முடிவு இது. இதைத் தொடர்ந்து பாப்பரசர் பிரான்சிஸின் உடல் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவலாயத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணமுள்ளனர்.
இதேவேளை புனித பாப்பரசரின் மறைவையொட்டி ஆஜென்டீனா, பிரேசில் ஆகிய நாடுகள் ஏழு நாட்களையும் இந்தியா மூன்று நாட்களையும் துக்க நாட்களாக அறிவித்துள்ளன. புனித பாப்பரசரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் சனிக்கிழமையை போலந்து துக்கதினமாக அறிவித்திருக்கிறது.