நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் பெறுமதியுடைய, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த, பொல்கஹவெலவைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண், வௌிநாடு செல்ல முன்பாக விவசாயத் துறையில் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளராகப் பணியாற்றியமை தெரியவந்துள்ளது.
28,800 வெளிநாட்டுத் தயாரிப்பு “பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய 144 சிகரெட் அட்டைப்பெட்டிகளை அவரது பயணப் பையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பெண் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மார்ச் 05 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.