பாராளுமன்றில் ஜீவன் சீற்றம்
சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு ஆளும் தரப்பின் மலையக பிரதிநிதி குறிப்பிடுகிறார். பிரஜாவுரிமை பெற்றுக்கொடுத்த காரணத்தால் தான் சபைக்கு வந்து வாய்கிழிய பேசுகிறார்கள். மலையக பிரதிநிதி வந்த வழியை மறந்து விட்டார்.
முன்னாள் தலைவர்களை சாபம் என்று பேசுவது வீரம் என்று மலையக பிரதிநிதிகள் கருதலாம் அது உண்மையில் வீரமல்ல,அது அரசியல் சுயநலம் மற்றும் தலைகணத்தால் வரும் முட்டாள்தனம். மலையகம் இன்று பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நூலகம் எரிக்கப்பட்டமை பற்றி ஆளுங்கட்சியினர் பேசுகிறார்கள். நாட்டை எதிர்த்தவர்கள் முன்னிலையில் (ஆளும் தரப்பு) இருக்கும் போது நூலகத்தை எரித்தது பற்றி பேசுவது என்ன பயன்? பெருந்தோட்ட மக்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளோம், அதிகரித்துள்ளோம் என்று கூச்சலிடுகிறார்கள். சம்பளத்துடன் சேர்த்து மக்கள் மீதான சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம்.
சம்பள அதிகரிப்புக்கு முன்னர் 20 மற்றும் 22 கிலோகிராம் கொழுந்து பறித்தவர்கள் தற்போது 23 முதல் கிலோகிராம் வரை கொழுந்து பறிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.ஆளும் தரப்பின் உறுப்பினர்கள், தொழில் அமைச்சர் தோட்டங்களுக்கு சென்று இதனை ஆராய வேண்டும்.
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகாரத்த மண்டபம் பற்றி இன்று (நேற்று) சபையில் பேசப்பட்டது. 2005 ஆம் ஆண்டே இந்த ஞாபகார்த்த மண்டபம் ஸ்தாபிக்கப்பட்டது. அப்போதைய அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி அமைச்சராக பதவி வகித்தார் . ஆகவே உண்மையை மறந்து விட்டு பேசாதீர்கள்.
2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மண்டபத்துக்கு குடும்ப உறுப்பினர்களின் பெயர் எவ்வாறு வைக்கப்பட்டது என்று கேள்விக்கேட்கப்படுகிறது.ஜனாதிபதிக்கு வால் பிடித்து தேர்தலில் வெற்றிப் பெற்று பாராளுமன்றத்துக்கு வருகைத்தருவது பெரிய புத்தசாலித்தனமல்ல, முதலில் அரசாங்கம் என்னால் என்னவென்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், காமினி திசாநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் தலைவர் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க, இந்த நாட்டில் பல்வேறு மன்றங்கள் உள்ளன. ஞாபகார்த்த மன்றம் பற்றி பேசுவதற்கும், பெயர் மாற்றம் செய்யவும் பேசுவதற்கு மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை.
சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் ஞாபகார்த்த மண்டபம் உருவாக்கியது சாபக்கேடு என்று குறிப்பிடுகின்றீர்கள், எந்த தைரியத்தில் அவ்வாறு குறிப்பிடுகின்றீர்கள்.
அவர் பிரஜாவுரிமை பெற்றுக்கொடுத்த காரணத்தால் தான் சபைக்கு வந்து வாய்கிழிய பேசுகின்றீர்னள். மலையக பிரதிநிதி வந்த வழியை மறந்து விட்டார்.
முன்னாள் தலைவர்களை சாபம் என்று பேசுவது வீரம் என்று மலையக பிரதிநிதிகள் கருதலாம் அது உண்மையில் வீரமல்ல, அது அரசியல் சுயநலம் மற்றும் தலைகணத்தால் வரும் முட்டாள்தனம். அதை புரிந்துக் கொள்ளுங்கள்.இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு எதை பெற்றுக்கொடுத்தீர்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 இலட்சம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. மலையக மக்களில் 90 சதவீதமானோருக்கு காணியும் இல்லை , வீடும் இல்லை இதை பற்றி பேசுங்கள். ஏதும் வழங்கப்படவில்லை.மலையக மக்கள் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளார்கள் அது தான் உண்மை.
குறை சொல்லும் அரசியலை ஆளும் தரப்பில் உள்ள மலையக அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். உங்களை விட எனக்கு நன்றாக பேச தெரியும்.
காலையில் பாடசாலை மாணவர்களை போல் ஒருவர் கேள்வி கேட்க, இன்னொருவர் பதில் சொல்லுகிறார். மலையகத்துக்கு சென்று மக்களின் பிரச்சினைகள் பற்றி கேளுங்கள். நாட்டுக்கு சேவையாற்றியவர்களின் பெயர்கள் தான் மன்றங்களுக்கு சூட்டப்படுமே தவிர, நாட்டை அழித்தவர்களின் பெயர் அல்ல என்றார்.
