யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் முயற்சியில், இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மீனவர்கள், இன்று (28) அதிகாலை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கமைய, பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் கூடிய ஒரு படகு, அனுமதியின்றி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்ய முயன்ற கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிக்க முற்பட்டதால், இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ளதால், அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.