
பஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜம்மு – காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (22) நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர்.
அப்போது ஆயுதங்களுடன் இந்தப் பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புடின் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காயமடைந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கு லஷ்கர் – ஏ – தொய்பாவின் மூத்த தளபதி சைஃபுல்லா கசூரி மூளையாகச் செயல்பட்டதாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.