காலி மாவட்டத்தின் ஹினிதும, பனங்கல பகுதியில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவலின் படி, உயிரிழந்தவர்களில் ஒருவர் விடுதி உரிமையாளர் என்பதோடு, மற்ற இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்களாக உள்ளனர். மூன்றாவது நபரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.
தாக்குதலில் ஈடுபட்ட இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்த மூவரும் மதுபானம் அருந்தி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹினிதும பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொஸ்கொடவில் மற்றொரு துப்பாக்கிச் சூடு முயற்சி நேற்றைய தினம் (30) காலி, கொஸ்கொட, மஹா இந்துருவ பகுதியில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், வீட்டின் முன் நின்ற ஒருவரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பிலும் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.