நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இன்று (05) நாள் முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால், பொதுமக்கள் அவசியமாக முகக்கவசம் அணியுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.
வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலைக்குள் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (04) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருந்த நிலையில், குருநாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பில்பிட்டிய, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் சற்று ஆரோக்கியமற்ற நிலை காணப்பட்டது.
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நேரங்களில், காற்றின் தரக் குறியீடு (AQI) மோசமான நிலைக்கு செல்லக்கூடும்.
நாடு முழுவதும் காற்றின் தரம் அடுத்த 24 மணிநேரத்துக்குள் நல்ல நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்றின் தாக்கத்தால், நாடு முழுவதும் சில நாட்களுக்கு காற்றின் தரம் மோசமான நிலையில் காணப்படலாம்.
காற்றின் தரம் குறைவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.