அநுராதபுரம் பகுதியில் வைத்து திட்டமிட்ட வகையிலேயே என்னை போக்குவரத்து பொலிஸார் மறித்தார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றையதினம் (05) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெறவிருந்த பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்த போதே இவ்வாறு பொலிஸார் மறித்து விசாரணை நடத்தினர்.
எனது வாகனத்தில் விஐபி விளக்குகள் போடப்பட்டிருந்ததாக தெரிவித்து அவர்கள் என்னை மறித்தார்கள் என்று அர்ச்சுனா இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், அர்ச்சுனா இராமநாதனின் உரையை இடைநிறுத்திய சபாநாயகர்இ நீங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவித்திருந்தீர்கள் எனவே தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என அறிவித்த பின்னர் தனது உரையை ஆங்கிலத்தில் ஆற்றினார்.
ஆங்கிலத்தில் உரையாற்றிய அருச்சுனாவை குறுக்கிட்ட சபாநாயகர், “உங்களுடைய அடையாள அட்டை பாராளுமன்ற அலுவலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் தான் பெற்றுக் கொள்ள தவறியுள்ளீர்கள்“ என சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த அர்ச்சுனா, தான் அநுராதபுரத்தில் வைத்து இடைமறிக்கப்பட்ட பின்னர், தனக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடந்த உரையாடலை பொலிஸார் பதிவு செய்து அதனை ஊடகங்களில் வெளியிட்டதாகவும், பொலிஸாரின் இந்த செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று. தான் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் இவ்வாறு பொலிஸார் பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இதன்போது, இடையில் குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும், இங்கு பாகுபாடு இல்லை. அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் தயாசிறி சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு மனநோயாளி என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்நமை குறிப்பிடத்தக்கது.