பண்டைய காலம் தொட்டு, பல நூற்றாண்டுகளாக, பன்நெடுங்காலமாக எமது நாட்டில் முன்னேற்றம் கண்ட விவசாயமும், சிறந்த நீர்ப்பாசன நாகரீகமும் காணப்பட்டன. இந்த நீர்ப்பாசன நாகரீகமும் விவசாயமும் தற்போது அழிந்து வருகின்றன. என்றாலும் நாம் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமானால் விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இது நமது நாட்டிற்கு டொலர்களை ஈட்ட சிறந்த வழியாகும். இது தொடர்பிலான பல யோசனைகளையும் முன்மொழிவுகளையும் இங்கு முன்வைக்கிறேன். இது தொடர்பில் அரசாங்கம் விரைந்து கவனம் செலுத்தும் என நம்புகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2025 வரவு செலவு திட்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டுக்கென தேசிய விவசாயக் கொள்கையை வகுக்க வேண்டும். காலத்துக்குக் காலம் மாறும் கொள்கைகளுக்குப் பதிலாக தேசியக் கொள்கையை வகுத்து, விவசாய சமூகத்துக்கும் விவசாயத்துக்கும் பெறுமானமளிக்க வேண்டும். விவசாயம் தோல்வி கண்டு விட்டது. அது நஷ்டம் ஏற்படும் துறை என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். நவ லிபரல் சிந்தனைகள் மோலோங்க அனுமதிக்காமல் விவசாயத்தை வலுப்படுத்த தேசிய கொள்கையொன்று எமக்கு தேவையாக காணப்படுகின்றது. இதன் மூலம் விவசாயத்திற்கும், விவசாயிக்கும் உரிய பெறுமானமும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேசிய விவசாய கொள்கையொன்று காணப்படாமையினால் உற்பத்தி சுழற்சி எல்லா வகையிலும் திறனற்று காணப்படுகிறது. உள்ளீடுகள், உற்பத்திச் செயல்முறை, தொழில்நுட்பம், விற்பனை, சந்தை போன்ற சகல செயன்முறைகளிலும் தெளிவான கொள்கையொன்று காணப்பட வேண்டும். இதனால்தான் விவசாயிக்கு எதிரான சில தீவிர நவ லிபரல் நிகழ்ச்சி நிரல்கள் வெளிப்பட்டு வருகின்றன. விவசாயத்தின் உற்பத்தி செயல்முறை வினைத்திறனாக்க வேண்டும். விவசாயத்தில் ஈடுபடும் தரப்பினருக்கு நவீனமயமாக்கல், புத்தாக்கம், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய விவசாய முறைகளை நோக்கி நகர்த்த வேண்டும். அவர்களுக்கு நவீன உபகரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும். உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தேவையான சகல தேவைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இளைஞர் யுவதிகள் விவசாயத்திலிருந்து விலகிச் செல்வதைத் தடுக்க நிலையான விவசாய முறைமையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பிற்கு விவசாயம் இன்றியமையாததாகும். இதற்கு யானை-மனித மோதல், வனவிலங்கு-மனித மோதல் போன்ற சவால்களை முறியடிக்க வேண்டும். தற்போதைய பயிர் தேச இழப்பீடு மற்றும் உயிர் இழப்பீடு மற்றும் சொத்து சேத நட்டஈடு ஆகியவற்றில் திருப்தி காண முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
யானை – மனித மோதலை குறைக்க, நாட்டுக்கு ஏற்ற தேசிய நில பயன்பாட்டு திட்டமொன்று தேவையாக காணப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட பூங்காக்கள், சரணாலயங்கள் போன்ற இடங்களைப் பற்றிய தேசிய நில பயன்பாட்டுத் திட்டமொன்றை வகுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, GPS முறைகள் மற்றும் சமூக பங்கேற்பு மூலம் இவற்றைத் தடுக்கலாம். யானை-மனித மோதலைத் தடுக்க சில நாடுகள் தேனீக் கூடு முறைகளையும் ஆரம்பித்துள்ளன. மேலும், இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மிளகாய் தடுப்பு, ட்ரப் குரொப்பிங் முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. மின்சார வேலிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த அகழி முறைகளும் காணப்படுகின்றன. வெற்றிகரமான முறைகள் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன.
கிரீன்ஹவுஸ் விவசாயம் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற பல துறைகளில் இருந்து உலகின் விவசாய ஏற்றுமதியில் ஆண்டுதோறும் 115 பில்லியன் டொலர்களை நெதர்லாந்து ஈட்டி வருகின்றது. அங்கு விவசாய நிலம் 0.1% ஆக காணப்பட்டாலும், உலகின் மொத்த காய்கறி ஏற்றுமதியில் 20% க்கும் அதிகமான உற்பத்திகள் அங்கு நடக்கின்றன. பொதுவான விவசாயக் கொள்கை, நில பயன்பாட்டுத் திட்டம், பால் ஒதுக்கீடு, உரச் சட்டம், புத்தாக்க தொழில்நுட்பம், நிலைபேறான பிரயோக கல்வி மற்றும் புதிய சந்தைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி நெதர்லாந்து விவசாயத்தில் முன்னேற்றம் கண்டுள்ளன. நெதர்லாந்தில் இருந்து ஒரு நாடாக நாம் பாடம் கற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆராய்ச்சித் துறையில் புதிய முன்னேற்றம் ஏற்பட வேண்டும். விவசாயத்தில் இலங்கை ட்ரோன் முறையைப் பயன்படுத்த முன்வர வேண்டும். அதுமட்டுமல்லாமல், புதிய உபகரணங்கள், ஜிபிஎஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கரின் உற்பத்தித் திறனை அதிகரிப்பது குறித்து சிந்திக்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் சேதங்கள் தொடர்பில் கணக்கீட்டை நடத்த வேண்டும். அண்மைய அனர்த்தங்களினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை. பயிர்ச் சேதம் ஒரு செலவாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சுக்களை நாம் வேறாக்க முடியாது. விலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்துவதாக இருந்தால், கால்நடை அமைச்சின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த கணக்கெடுப்பில் பல பலவீனங்கள் காணப்படுகின்றன. விவசாய அமைச்சால் வனவிலங்குகள் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது. இந்த கணக்கெடுப்பை ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்தும், இணைத்துக் கொண்டும் நடத்தத் வேண்டும். கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல விலங்குகள் கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை. கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால், அதனை முறையாக நடத்தப்பட வேண்டும்.
கணிப்பிடப்பட்டுள்ள ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு யதார்த்த பூர்வமானதாக அமைவதாக இல்லை. இது குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மாதிரி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விலை சூத்திரங்களை பயன்படுத்தும் போது, இது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகிறது. பெரும் போக பருவத்தில் நெல் கொள்வனவு செய்ய 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் சிறுபோக பருவத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள இந்தப் பணத்தில் 40000 மெட்ரிக் டொன் நெல்லையே கொள்வனவு செய்ய முடியும். இது மொத்த அறுவடையில் 1.3% ஆக காணப்படுகின்றது. இதன் மூலம் விலை கட்டுப்பாட்டை நிலைபெறச் செய்ய முடியாது. இது வெற்றியடைய வேண்டுமானால் 7-10% அறுவடையை கொள்வனவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எமது நாட்டில் பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் காணப்படுகின்றன. எனவே இதில் கவனம் செலுத்தி புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பழமை வாய்ந்த நீர்பாசனத் திட்டங்களையும் புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். இலங்கைக்கும் குட்டி நெதர்லாந்து போல ஆகலாம். இதற்கு விவசாயத்தை அழிக்காமல் காப்பது அனைவரின் கடமையாகும். இதன் மூலம் ஏற்றுமதி சார்ந்த விவசாய நாடாக பெருமை கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.