குற்றவியல் நீதி தொடர்பில் ஒரு வார்த்தையையும் அரசாங்கம் ஜெனீவாவில் கூறவில்லை

Date:

‘‘குற்றவியல் நீதி தொடர்பில் ஒரு வார்த்தையையும் அரசாங்கம் ஜெனீவாவில் கூறவில்லை. யுத்த சம்பவத்தில் குற்றவியல் தொடர்பான நீதி மிகவும் முக்கியமானது.

ஆனால் அதனைத் தவிர அனைத்தையும் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் பேசியுள்ளார். ஜெனீவா விவகாரத்தில் முன்னைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே தற்போதைய அரசாங்கமும் கொண்டுள்ளது என்பதை வெளிவிவகார அமைச்சரின் உரையின் ஊடாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது’’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அதன்போது கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

‘‘கடந்த பாராளுமன்றத்தில் இதே தலைப்பின் கீழ் விவாதத்தில் கலந்துகொண்டிருந்தபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அதன் நம்பகத் தன்மை தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் சில உறுப்பினர்கள் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்தபோது காணாமல் போனோரின் உறவினர்களையும் சந்தித்ததுடன், கொழும்புக்கு வந்ததும் அது தொடர்பில் அறிக்கையொன்றையும் வெளியிட்டி ருந்தனர்.

அந்த அறிக்கையில் இருந்த விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை. பாதிக்கப்பட்ட தரப்பினர் நஷ்டஈட்டுக்கு இணக்கம் தெரிவித்தி ருந்ததாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அது தவறான தகவலாகும். இதனை குறிப்பிடுவதற்கான காரணம் என்னவெனில், பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகங்கள் நிலவுகின்றன.

வடக்கு, கிழக்கை எடுத்துக் கொண்டால் இன்னும் இராணுவ மயமாக்கலாகவே இருக்கின்றது. பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதை போன்றே தெரிகின்றது. சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு தண்டனை இடமாற்றங்கள் இடம்பெறுவதால் அங்கே பகைமை உணர்வு காணப்படுகின்றது. இதனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நம்ப வேண்டியுள்ளது. பொலிஸாரின் செயற்பாடுகளில் அவர்கள் தலையிட வேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் எமது அரசியல் கட்சியினர் தையிட்டி விகாரை தொடர்பில் நீதிமன்றத்தில் உத்தரவு கேட்டபோது நீதவான் அதற்கு மறுப்பு தெரிவித்தார். எனினும், அந்த ஆர்ப்பாட்டத்தை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விதப்புரைகளை வழங்கியிருந்தார். இதன்படி நாங்கள் அந்த நடவடிக்கையை கவனமாக முன்னெடுத்தோம். எனினும், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த இடத்துக்குச் சென்று அங்கிருந்த பொதுமக்கள், ஊடகவிய லாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை கைது செய்திருந்தனர்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 08 முறைப்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகள் சம்பவம் இடம்பெற்ற அன்றே செய்யப்பட்டது. அதன் பிரதிநிதி உடனே அங்கே வந்தார். ஆனால், பொலிஸார் அவரையும் அச்சுறுத்தியுள்ளனர்.

ஆனால், இன்றுவரையில் அது தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் செய்யவில்லை. எம்மிடம் ஒரு நம்பிக்கை மட்டுமே உள்ளது. எங்களுக்கு இந்த ஆணைக்குழுவிடம் மட்டுமே செல்ல முடியும். சுதந்திரமாக இந்த ஆணைக்குழுவுக்கு செயற்பட முடியாவிட்டால் என்ன செய்யலாம். இந்த ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது.

தற்போது வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் இருக்கின்றார். அவர் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை வலுப்படுத்துவதாகக் கூறியுள்ளார். போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் குற்றவியல் நீதி தொடர்பில் ஒரு வார்த்தையையும் அவர் கூறவில்லை. யுத்த சம்பவத்தில் குற்றவியல் தொடர்பான நீதி மிகவும் முக்கியமானது. ஆனால் அதனைத் தவிர அனைத்தையும் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் பேசியுள்ளார்.

மனிதப் படுகொலைகளை செய்தவர்களை சட்டத்தின் முன்கொண்டு வருவதைத் தவிர அனைத்தையும் கூறியுள்ளார். இவர் பலவற்றை மூடி மறைக்கின்றார். இது மிகவும் கவலைக்குரிய விடயமே. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இதனையே செய்தார். ‘சிஸ்டம் சேஞ்’ என்று கூறிக்கொண்டு வந்த நீங்களும் முன்னைய அரசாங்கங்களின் எண்ணப்பாடுகளையே கொண்டுள்ளீர்கள்.

ஜனாதிபதி தன் மீதான நம்பகத் தன்மையை பாதுகாக்க வேண்டுமாயின் அவர் இதில் தலையிட வேண்டும். எவ்வாறாயினும், கடந்த 77 வருடங்களாக தமிழ் மக்கள் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கின்றோம். முன்னைய அரசாங்கங்கள் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை எவ்வாறு நோக்கினவோ அவ்வாறே இந்த அரசாங்கமும் நோக்குகின்றது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொத்மலை இறம்பொடை பஸ் விபத்து: 21பலி

கொத்மலை இறம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கியுள்ளது. அதன்படி,...

புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் வழங்குவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று...

முன்னாள் பாராளுமன்ற செயலாளர் இராஜினாமா

முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும்...