போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (29) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு குறித்த நபர் இலங்கைக்கு வந்துள்ளார். மேலும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் மற்றும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கும் வகையில் மூன்று பயணத் தடைகளுக்கு உட்பட்டுள்ளார்.
அவர் நாட்டில் இருந்தபோது குடிவரவுச் சட்டங்களை மீறியதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் விமான நிலையத்தில் அனைத்து அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு, குடிவரவு விவகார சரிபார்ப்பினை நிறைவு செய்ய குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவுக்கு வந்து, தனது கடவுச்சீட்டை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தபோது கடவுச்சீட்டு தொடர்பான சந்தேகங்கள் காரணமாக, இந்த நைஜீரிய நாட்டவர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் விமான நிலைய எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது, அவரது கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு போலி வணிக விசா மற்றும் போலி குடிவரவு முத்திரையை குடிவரவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும், அவரை சோதனைக்கு உட்படுத்திய போது, அவர் அணிந்திருந்த உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது உண்மையான கடவுச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, இந்த நைஜீரிய பிரஜையைக் கைது செய்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், மேலதிக விசாரணைக்காக அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.