‘‘சிறுவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்காக முன்னிற்கும் எனக்கு எதிராக சமூக வலைத்தளங்கள், டிக்டொக்கில் சேறு பூசப்படுகின்றது. மோசமாக விமர்சிக்கப்படுகின்றது.
18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள். அவர்களுக்கு கட்டாயம் 13 வருட கல்வி வழங்கப்பட வேண்டும். அதனையே நான் வலியுறுத்துகின்றேன்.
எனவே இதனை இன, மத, அடிப்படைவாதத்தில் பார்க்க வேண்டாம்’’ என சிறுவர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
‘‘18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள். அவர்களுக்கு கட்டாயம் 13 வருட கல்வி வழங்கப்பட வேண்டும். அதனையே நான் வலியுறுத்துகின்றேன்.
எனவே இதனை இன, மத, அடிப்படைவாதத்தில் பார்க்க வேண்டாம். பேச வேண்டாம். அடிப்படைவாதத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம். சிறுவர், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும்.
அதற்காக நான் செயற்படும் போது எனக்கு எதிராக சமூக வலைதளங்கள், டிக்டொக்கில் சேறு பூசப்படுகின்றது. என்னை மோசமாக விமர்சிக்கின்றார்கள். நாம் இன, மத ரீதியாக செயற்படுபவர்கள் இல்லை. ஆனால் ஐ.நா. சிறுவர் சமவாயத்தின் அடிப்படையில் 18 வயதுக்கு குறைந்த அனைவரும் சிறுவர்கள் என்ற அடிப்படையில்தான் நாம் செயற்படுகின்றோம்.
ஜம்இய்யத்துல் உலமாவுடன் இருதடவைகள் பேசியுள்ளோம். சகல சிறுவர்களுக்கும் கல்வி பெற்றுக்கொள்வது அவர்களின் அடிப்படை உரிமை. அவர்களுக்கு நாம் முன்னிற்போம். நான் நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் அல்ல. சிறுவர் மகளிர் விவகார அமைச்சர்.
அந்தவகையில் சிறுவர், மகளிர் உரிமை பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம். நான் இந்த விடயங்களை 01, 02 வருடங்களாக பேசவில்லை.
என்னுடைய அரசியல் பயணம் 26 வருடங்களைக்கொண்டது. அதனால் நீண்டகாலமாக பெண்கள், சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றேன். அது ரிஸானா நபீஸாக இருக்கலாம். ஹிஷாலினியாக இருக்கலாம். இவர்களைப்பற்றி நாங்கள் பேசியுள்ளோம். எங்களுக்கு ஏதாவது சட்டங்களை மாற்ற வேண்டிய தேவை இருந்தால் அதனைப்பற்றி நாம் கலந்துரையாட வேண்டிய தன்மையுள்ளது.
ஒரு சட்டத்தை அமுல்படுத்த பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும்போது அதனை தனிப்பட்ட ரீதியாகவோ பலவந்தமாகவோ செய்ய முடியாது என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி எம்.பி. உதுமாலெப்பை, ‘‘குழந்தை திருமணத்தை மாற்ற அரசு ஆலோசனை. குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் விவாக சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை. அமைச்சர் சரோஜா போல்ராஜ் ஐ.நாவுக்கு தெரிவிப்பு என்றுள்ளது.
இந்த விடயத்தை நாம் ஐ.நாவுக்கு சொல்லத்தேவையில்லை. இலங்கையில் உள்ள ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் சொல்லலாம். சிங்கள, தமிழ், மலையகத்தில் கூடுதலாக குழந்தை திருமணங்கள் நடந்துள்ள நிலையில் ஏன் முஸ்லிம் சமூகத்தை மட்டும் குறிப்பிட்டு சொல்கின்றீர்கள்’’ எனக்கேட்டார்.
இதற்கு அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் பதிலளிக்கையில், ‘‘ஐ.நா. சபையில் நாம் விரும்பியதை பேச முடியாது. அவர்கள் எதனைக் கேட்கின்றார்களோ அதற்கு பதிலளிக்கத்தான் ஐ.நா. சபை கூட்டப்படுகின்றது.
அங்கு நடந்த சீடோ மாநாட்டின்போது அதற்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது. இது இங்குள்ள ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் தவறான முறையில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
ஐ.நா. சபையில் அவ்வாறான ஒரு பேச்சை நான் பேசவில்லை. பலதரப்பட்ட குழுவின் ஆலோசனைகளைப் பெற்று இதனைத் தீர்ப்போம் என்றுதான் நான் கூறினேன். சட்ட மாற்றங்களுக்கு முன்வருவோம் என்ற வார்த்தையை நான் கூறவில்லை. எனவே அந்த பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூறுகின்றேன்’’ என்றார்.