போதைப் பொருள் கடத்தல் மன்னன் சுட்டுக்கொலை : ஆதரவாளர்கள் வன்முறை

சர்வதேச அளவில் தேடப்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான எல் மென்ச்சோவை மெக்சிக்கோ ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை (22) சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்துஇ எல் மென்ச்சோவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மெக்சிகோவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள்களை சட்டவிரோதமாக கடத்தும் சட்டவிரோத அமைப்பை நடத்தி வந்த எல் மென்ச்சோ மீது சர்வதேச அளவில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

போதைப் பொருள் கடத்தல் மட்டுமின்றி கொலைஇ கொள்ளைஇ கடத்தல் எனப் பல்வேறு குற்றச்செயல்களில் எல் மென்ச்சோவின் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்காவுக்கு மெக்சிகோவில் இருந்து போதைப் பொருள் கடத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். எல் மென்ச்சோவை கொலை செய்ய மெக்சிக்கோ அரசுக்கு நெருக்கடி கொடுத்தது மட்டுமின்றி, அவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 1.5 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜாலிஸ்கோ மாகாணத்தில் பதுங்கியிருந்து போதைப் பொருள் கடத்தலை செய்துவந்த எல் மென்ச்சோவை தேடும் பணியில் மெக்சிகோ ராணுவத்தினர் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எல் மென்ச்சோ படுகாயமடைந்தார். அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து மெக்சிகோவின் பல்வேறு மாகாணங்களில் எல் மென்ச்சோவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் வாகனங்களுக்கு தீ வைப்பதுடன், கடைகளை அடித்து சேதப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நிலைமை கட்டுக்குள் வரும்வரை வன்முறை நடக்கும் பகுதிகளில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், மெக்சிக்கோவுக்கான இந்திய தூதரகமும், அந்நாட்டில் உள்ள இந்திய மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Similar Posts