மாவை சேனாதிராசா (Mavai Senathirajah,) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.
மாவை சேனாதிராசாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.
வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம்
மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராக, தனது அரசியல் வாழ்க்கையை தமிழ் தேசியத்திற்காக அர்ப்பணித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல், மொழி, கல்வி, நில உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) முக்கியமான தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டணியின் (TNA) முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2000-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்காக பாராளுமன்றத்தில் தொடர்ந்து தனது வாதங்களை முன்வைத்தார்.
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம்
மாவை சேனாதிராஜா, இந்தியா-இலங்கை உடன்படிக்கை, தமிழீழம் தொடர்பான விடயங்கள், அரசியல் தீர்வுகள் உள்ளிட்ட பல விடயங்களில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பிரசாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் தமிழ் மக்களுக்காகவும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.
பின்னர் 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.
1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் ஏழாண்டுகள் கழித்தார்.1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

சேனாதிராசா 1989 பாராளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்ப்/ஈபிஆர்எல்எஃப்/ டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.
ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.
2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.
2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.
இதன் பின் 2001 தேர்தலில் த.தே.கூ சார்பாக யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.
அதேபோல் 2004, 2010, 2015 நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 செப்டம்பர் இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1989 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 2>820 தெரிவு செய்யப்படவில்லை
2000 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 10>965 தெரிவு
2001 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 33>831 தெரிவு
2004 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 38,783 தெரிவு
2010 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 20,501 தெரிவு
2015 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 58,782 தெரிவு
2020 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 20,358 தெரிவு செய்யப்படவில்லை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா (29 ஜனவரி 2025) இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி 82 வயதில் காலமானார்.
மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தரப்பினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது இறுதிக்கிரியைகள் 2 பெப்ரவரி 2025, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

