இந்திய – இலங்கை மீனவர்கள் குறித்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என இராமேஸ்வரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ரூபில்டன், டேனியல், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று படகுகளிலிருந்து 34 மீனவர்கள் மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
34 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு பெப்ரவரி 5 வரையிலும் நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீனவ பிரதிநிதி சேசுராஜா தலைமையில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாகை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிலர் அதிக குதிரை திறன் கொண்ட இஞ்ஜின்களை விசைப்படகுகளில் பொறுத்தி உள்ளனர். அதிக குதிரை திறன் கொண்ட விசைப்படகுகள், இலங்கை மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்யும்போது அவர்களது வலைகளை சேதப்படுத்துவதால் இலங்கை கடற்படை அப்பாவி இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மீனவர்களை கைது செய்கின்றனர்.
இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாகை, காரைக்காலைச் சேர்ந்த அதிக குதிரை கொண்ட விசைப்படகுகள் பாக் ஜலசந்தி மற்றும் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்காகமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய – இலங்கை இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும், இராமேஸ்வரத்தில் இழுவை படகுகளை ஒப்படைத்து விட்டு மாற்றுத்தொழில் செய்ய விரும்பும் படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இராமேஸ்வரம் பஸ் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.