தேசிய கண் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் வெளியில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றதென வைத்தியசாலையின் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு திடைத்த தகவலினடிப்படையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்த தேசிய கண் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜயரூவன் பண்டாரவுக்கு சமையலறை பணியாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை தொடர்பில் சமையலறை பணியாளர்கள் இருவரை அழைத்து விசாரணை நடத்திய நிலையில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இவ்வாறு உணவுகள் வைத்தியசாலைக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.