முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்ததை போன்று பட்டலந்த விவகாரத்திலும் ஒன்றும் செய்ய முடியாது அரசாங்கம் தோல்வியடையும் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘‘நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேலைத்திட்டத்துடன் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை ஆரம்பித்த போதும், இப்போது அந்த திட்டம் இடம்பெறுவதை போன்று தெரியவில்லை. முதலில் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புங்கள். அதன்பின்னர் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்கலாம்.
இதேவேளை, இப்போது பட்டலந்தவை பிடித்துக்கொண்டிருப்பதில் பலனில்லை. மூன்று மாதங்களாக மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை பிடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் இன்னும் அவர் அந்த வீட்டில்தான் இருக்கின்றார். அவரை உங்களால் இதுவரையில் வெளியில் போட முடியவில்லை. நீதிமன்றத்துக்கு போவதாகவும் நீங்கள் கூறினீர்கள். ஆனால் அங்கேயும் நீங்கள் போகவில்லை. அந்த விடயத்துக்கு பதிலாக புதிய விடயமாக இப்போது பட்டலந்தவை பிடித்துள்ளீர்கள். இதுவும் இரண்டு மாதங்களுக்கு இழுத்துக்கொண்டு போகும்’’ என்றார்.