ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நான்கு தலைமை அதிகாரிகள் நியமனம்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் சட்டமா அதிபர் துறையின் நான்கு தலைமை அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹிரஞ்சன் பீரிஸ், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசார்ட் நவவி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி என்பது அரசியலமைப்பின் 33(cc) பிரிவின் கீழ் ஜனாதிபதியால் வழங்கப்படும் தொழில்முறை பதவியாகும்.
இந்த அரசியலமைப்பு ஏற்பாட்டின்படி, தொழிலில் நற்பெயரைப் பெற்ற மற்றும் உயர் நடத்தை தரநிலைகள் மற்றும் தொழில்முறை நேர்மையைப் பேணுபவர்களை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் எதிர்வரும் காலத்தில் தீர்மானிக்கப்படும் ஒரு திகதியில் பிரதம நீதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்களென்பது குறிப்பிடத்தக்கது.
