வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலின்படி, தற்போது நிலவும் வறண்ட வானிலை மேலும் சில நாட்கள் தொடரக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்று (16) கொழும்பில் சாதாரணமாக 28 செல்சியஸ் அளவில் இருக்க வேண்டிய வெப்பநிலை 31 செல்சியஸாக உயர்ந்துள்ள நிலையில், இந்த அதிக வெப்பம் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக உடல் அதிக வியர்வை வெளியேற்றி நீர் மற்றும் உப்புகளை இழப்பதால், நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இது ஆரோக்கியமான நபர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெளியில் வேலை செய்யும்வர்கள், குறிப்பாக வீதிகளில் பணியாற்றுபவர்கள், விவசாயத்துறையில் ஈடுபடுபவர்கள் என திறந்த வெளியில் நேரத்தை செலவழிக்க வேண்டியவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நீரிழப்பு இதயத்தையும் மூளையையும் பாதிக்கக்கூடியதாக இருக்கும். இது மருத்துவ ரீதியாக “வெப்ப பக்கவாதம்” என குறிப்பிடப்படுகிறது. இதைத் தவிர்க்க, அவசியமான அளவில் நீர் பருக வேண்டும் எனவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.