பாணந்துறை கடலில் (12) பிற்பகல் நீராடி கொண்டிருந்த 13 பேரில் 12 பேர் மீட்கப்பட்டதாக பாணந்துறை உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், ஒரு இளைஞர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல் போன இளைஞர் பாணந்துறை, கெசல்வத்த, கெமுனு மாவத்தை என்ற இடத்தில் வசிக்கும் 18 வயது இளைஞராக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், தனது மூத்த சகோதரர் மற்றும் மூன்று நண்பர்களுடன் பாணந்துறை கடலில் மூழ்கிய பழைய கப்பலின் இடதுபுறத்தில் நீந்திக் கொண்டிருந்தார். அவர்களுடன் எம்பிலிப்பிட்டியாவைச் சேர்ந்த 8 பேரும் இருந்தனர்.
திடீரென, அவர்கள் ஒரு அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனே, உதவிக்கான கூக்குரலுக்கு அமைய கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகள் செயற்பட்டு 12 பேரை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அனைத்தும் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கடல் கொந்தளிப்பாக இருப்பதால், சிவப்புக் கொடிகள் காட்டப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை உயிர்காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட உயிர்காப்பாளர்களும் மூழ்கியிருந்த கப்பலில் மோதி காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.