வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடர்பில் தடுப்பூசிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (15) இரவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் நீண்ட நேரமாகியும் மின்சாரம் இணைக்கப்படாமையினால் அங்கு குளிரூட்டியில் வைக்கப்பட வேண்டிய தடுப்பூசிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்கின்ற சந்தேகம் நிலவியது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் செய்திகளும் வெளிவந்திருந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் வைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்,
மேலும் அவர் தெரிவிக்கையில்: சுமார் இரண்டு மணி நேரம் மாத்திரமே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. எம்மிடம் உள்ள குளிரூட்டிகள் 24 மணித்தியாலம் மின்சாரம் தடைபட்டாலும் கூட பாதுகாக்க கூடிய வசதி கொண்டவையாக காணப்படுகின்றதோடு பணிமணையில் தடுப்பூசிகளை பாதுகாக்க கூடிய வசதி உள்ளது.
எனவே, இங்குள்ள தடுப்பூசிகள் எந்த விதத்திலும் பழுதடைவதற்கு சந்தர்ப்பமில்லை. பொதுமக்கள் எவ்வித ஐயமும் இன்றி குறித்த தடுப்பூசிகளை பயன்படுத்தலாம். என தெரிவித்திருந்தார்.