ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, சீனாவிற்கhன நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (17) காலை
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிச்சுவான் மாகாணச் செயலாளர் வாங் சியாவ்ஹூவைச் சந்தித்தார்.

இருவருக்குமிடையிலான கலந்துரையாடலின் போது, சிச்சுவான் மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார, வர்த்தக, கலாச்சார, சுற்றுலா மற்றும்
அரசாங்கங்களுக்கு இடையிலான உறவுகளை புதிய உயரத்திற்கு உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை இரு தரப்பும் ஆராய்ந்தன.
மேலும், எரிசக்தி உட்பட பல்வேறு துறைகளில் சிச்சுவானின் குறிப்பிடத்தக்க சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டதுடன், சிச்சுவான் மாகாணத்தின் செயலாளருக்கு
அவர்களின் நிபுணத்துவம் மற்றும் வெற்றிக் கதைகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
வெளிப்படையான மற்றும் முதலீட்டாளர்களுக்கு நட்பான நிர்வாகத்தின் கீழ் இலங்கை தற்போது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான பாதையில்
செல்வதாக ஜனாதிபதி திஸாநாயக்க வலியுறுத்தினார்.
வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் இருந்து ஐக்கியப்பட்ட மக்களால் வழங்கப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் தற்போதைய அரசாங்கம்
அதிகாரம் பெற்றுள்ள நிலையில், நாடு ஒரு முக்கியமான அரசியல் திருப்புமுனையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். “அரசாங்கம் அதன் குடிமக்களின்
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது,” என்று அவர் கூறினார்.
இதற்கமைய, சீன சுற்றுலாப் பயணிகளுக்கான இடமாக இலங்கையின் கவர்ச்சியை ஜனாதிபதி அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், சிச்சுவான் மக்களுக்கு
தீவுக்குச் சென்று அதன் சிறப்பான விருந்தோம்பலை அனுபவிக்குமாறு அன்பான அழைப்பையும் விடுத்தார்.
இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.