தெஹிவளை- கல்கிஸை சிறிபுர பகுதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, துப்பாக்கிச் சூடுக்கு இலக்கான நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கல்கிஸை – படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் டுபாயில் பதுங்கியுள்ள பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ‘கொஸ் மல்லி’ என்பவரின் உதவியாளர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் 47 வயதுடையவர் என்றும், அவர் படோவிட்ட அசங்கவின் குழுவைச் சேர்ந்தவர் எனவும் கொஸ் மல்லிக்கும் படோவிட்ட அசங்கவிற்கும் இடையே நீண்டகாலமாக இருந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதோடு,மேலதிக விசாரணைகள் மேல் மாகாணத்தின் தெற்குப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பன தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது