தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்து தமிழக கடற்கரையை அடையும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறி உள்ளது.
இந்த நிலையில் நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என்றும் வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாக கூடுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வேளை தென்மேற்கு வங்ககடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரை ஆன ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்க்கும் படி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பலத்த காற்று, மின்னல் தாக்கங்களால் ஏற்பட கூடிய ஆபத்துக்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படும் படி கூறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரை ஆன கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் என்றும் புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரை ஆன கடற்பரப்புக்கள் ஓர் அளவு கொந்தளிப்பாக காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனர்த்தங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தும் படியும் அனர்த்தநிலைமைகள் பதிவாகும் ஆயின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கம் 117 எனும் இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்கும் படி பொதுமக்களிற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.