கடந்த 3ம் திகதி அன்று குறிப்பிடப்பட்டவாறு இன்று காலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா இது தொடர்பிலான அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதன்படி, வங்காள விரிகுடாவில் இன்று உருவாகும் காற்று சுழற்சி, இரவு அல்லது நாளை (08.12.2024) காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி முதலில் மேற்கு வடமேற்கு திசையாக நகர்ந்து பின்னர் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகருமென எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள விரிகுடாவில் இத் தாழமுக்கம் வலுவடைவதற்கான கடல் மேற்பரப்பு வெப்பநிலை நிலவுகின்றது. நேற்று வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29 பாகை செல்சியஸ் ஆக இருந்தது.
இதனால் இன்று உருவாகும் காற்று சுழற்சி எதிர்வரும் 10 ஆம் திகதி அன்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் இது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் இருந்து சற்று தொலைவாகவே கடற்பகுதியில் வடக்கு, வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதன் நகர்வு திசை மற்றும் வேகம் அதற்கு கிடைக்கும் மறைவெப்ப சக்தியைப் பொறுத்து மாற்றமடையலாம் என்பதனைக் கருத்தில் கொள்க. இருப்பினும், இக்காற்றழுத்த தாழ்வு நிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 10 ஆம் திகதி இரவு முதல் 15 ஆம் திகதி வரை மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி அன்று 100 வீதமாக இருந்த இந்நிலைமை கடந்த சில நாட்களாக இருந்த வெப்பநிலையின் காரணமாக ஆவியாக்கத்தின் விளைவாக தற்போது 97வீதமாக உள்ளது.
ஆகவே சராசரியாக 30 மி.மீ. மழை கிடைத்தால் இது மீண்டும் 100சதவீதத்தினை அடைந்து விடும்.எனவே, அதன் பின்னர் கிடைக்கும் மழை தரை மேற்பரப்பில் தேங்கி மீண்டும் தாழ்வான பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம்.
அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் குளங்களும் அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அவை சற்று கன மழை (30 மி.மீ. முதல் 50 மி.மீ. வரை) கிடைத்தாலே மீண்டும் வான் பாயத் தொடங்கும்.
எனவே, குளங்களின் உபரி நீர் வெளியேற்றமும் சில இடங்களில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கலாம். நாளை முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
அதேவேளை, எதிர்வரும் 19 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. அது தொடர்பான மேலதிக விபரங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும்.