தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில்
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (17) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் சுற்றுலா பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளதோடு விபத்தில் காயமடைந்த நால்வர்
தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான பஸ்ஸில் 12 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிறிதளவு காயமடைந்த
சுற்றுலாப் பயணிகள் 9 பேர் பெலியத்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக
தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சாரதியின் சடலம் பெலியத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.